பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதி
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்
குருகைகாவலப்பன் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
சீராரும் மாடத் திருக்கோவலூ ரதனுள்,
காரார்கரு முகிலைக் காணப்புக்கு,-ஓராத்
திருக்கண்டே னென்று ரைத்த சீரான்கழலே,
உரைக்கண் டாய்நெஞ்சே* உகந்து.
மூன்றாம் திருவந்தாதி
2282
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன,-செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று.#
1
2283
இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,
பொன்தோள் வரைமார்வில் பூந்துழாய்,-அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை
மருக்கண்டு கொண்டென் மனம்.
2
2284
மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன்,-சினத்துச்
செருநர்உகச் செந்றுகந்த தேங்கோத வண்ணன்,
வருநரகம் தீர்க்கும் மருந்து.
3
2285
மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே,-பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி.
4
2286
அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம்,-முடிவண்ணம்
ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே
ஆராழி கொண்டாற் கழகு.
5
2287
அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,
அழகன்றே யண்டம் கடத்தல்,-அழகன்றே
அங்கைநீ ரேற்றாற் கலர்மேலான் கால்கழுவ,
கங்கைநீர் கான்ற கழல்?
6
2288
கழல்தொழுதும் வாநெஞ்சே* கார்க்கடல்நீர் வேலை,
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன்,-எழிலளந்தங்
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,
நண்ணற் கரியானை நாம்.
7
2289
நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,
நாமங்கை யல்தொழுதும் நன்னெஞ்சே*-வா,மருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,
கண்ணனையே காண்கநங் கண்.
8
2290
கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,
மண்ணளந்த பாதமும் மற்றவையே,-எண்ணில்
கருமா முகில்வண்ணன் கார்க்கடல்நீர் வண்ணன்,
திருமா மணிவண்ணன் தேசு.
9
2291
தேசும் திறனும் திருவும் உருவமும்,
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும்,-பேசில்
வலம்புரிந்த வான்சங்கம் கொண்டான்பே ரோத,
நலம்புரிந்து சென்றடையும் நன்கு.
10
2292
நன்கோது நால்வேதத் துள்ளான், நறவிரியும்
பொங்கோ தருவிப் புனல்வண்ணன்,-சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார்
நு}ற்கடலான் நுண்ணறிவி னான்.
11
2293
அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
செறிவென்னும் திண்கதவம் செம்மி,-மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் படி.
12
2294
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட-முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு.
13
2295
மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
நு}ற்பால் மனம்வைக்க நொய்விதாம்,-நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பணிந்து.
14
2296
பணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத,
பணிந்த பணிமணிக ளாலே-அணிந்து,அங்
கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
மனந்த னணைக்கிடக்கும் வந்து.
15
2297
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக்காம்,-எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று.#
16
2298
சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்களமால்,
என்றநா ளெந்நாளும் நாளாகும்,-என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,
மறவாது வாழ்த்துகவென் வாய்.
17
2299
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து காண்ட நெடுமாலே,-தாவியநின்
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள்.
18
2300
அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்,-இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,
முந்தையராய் நிற்பார்க்கு முன்?
19
2301
முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே?-என்னே
திருமாலே* செங்க ணெடியானே, எங்கள்
பெருமானே* நீயிதனைப் பேசு.
20
2302
பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான்,-தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு.
21
2303
வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்
கடியார் மலர்தூவிக் காணும்-படியானை,
செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,
மெய்ம்மையே காண விரும்பு.
22
2304
விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு தொளையில்சென் றூத,-அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,
மனம்துழாய் மாலாய் வரும்.
23
2305
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,
நெருங்குதீ நீருருவு மானான்,-பொருந்தும்
சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்
தொடராழி நெஞ்சே* தொழுது.
24
2306
தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி,-விழுதுண்ட
வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்
சேயானை நெஞசே* சிறந்து?
25
2307
சிறந்தவென் சிந்தையும் செங்கண அரவும்,
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும்,-உறைந்ததுவும்,
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,
தாம்கடவார் தண்டுழா யார்.
26
2308
ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,
காரே மலிந்த கருங்கடலை,-நேரே
கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து?
27
2309
அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று
மிடைந்தது பாரத வெம்போர்,-உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்
பேய்ச்சிபா லுண்ட பிரான்.
28
2310
பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே,-வாய்த்த
இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,
தெருளா மொழியானைச் சேர்ந்து.
29
2311
சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு,-வாய்ந்த
மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,
இறைவாடி யாய இவை.
30
2312
இவையவன் கோயில் இரணியன தாகம்,
அவைசெய் தரியுருவ மானான்,-செவிதெரியா
நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்
பாகத்தான் பாற்கடலு ளான்.
31
2313
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,
நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல்,-பாற்பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,
குருந்தொசித்த கோபா லகன்.
32
2314
பாலகனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்
மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே,-மாலவனே*
மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானவமும்
அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று.
33
2315
அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய்,-அன்று
கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே* காண்.
34
2316
காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு
பூண்டார் அகலத்தான் பொன்மேனி,-பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை.
35
2317
கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள்,-செய்ய
படைபரவை பாழி பனிநீ ருலகம்,
அடியளந்த மாயன் அவற்கு.
36
2318
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,
உவர்க்கும் கருங்கடல்நீ ருள்ளான்,-துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,
திகழும் திருமார்வன் தான்.
37
2319
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுவும்,
தானே தவவுருவும் தாரகையும்,-தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இறை.
38
2320
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய்,-பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்.
39
2321
உளன்கண்டாய் நன்னெஞ்சே* உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத்-துளன்கண்டாய்,
விண்ணொடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,
மண்ணொடுங்கத் தானளந்த மன்.
40
2322
மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே,-மின்னை
உடையாயக் கொண்டன் றுலகளந்தான், குன்றம்
குடையாக ஆகாத்த கோ.
41
2323
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,-மேவி
அரியுருவ மாகி இரணிய தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.
42
2324
சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,
புனமேய பூமி யதனை,-தனமாகப்
பேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,
ஓரகலத் துள்ள துலகு.
43
2325
உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயு மாவான்,-பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,
பூரித்தென் நெஞ்சே புரி.
44
2326
புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,
திரிந்து சினத்தால் பொருது,-விரிந்தசீர்
வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்
மண்கோட்டுக் கொண்டான் மலை.
45
2327
மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தானொருகை பற்றி,-அலைமுகட்
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,
பிண்டமாய் நின்ற பிரான்.
46
2328
நின்ற பெருமானே* நிரேற்று, உலகெல்லாம்
சென்ற பெருமானே* செங்கண்ணா,-அன்று
துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ.
47
2329
நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய்,-நீயன்றே
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,
தேவா சுரம்பொருதாய் செற்று?
48
2330
செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றோ;றுப்
பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய்-முற்றல்
முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,மூரிச்
சுரியேறு சங்கினாய்* சூழ்ந்து.
49
2331
சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,
தாழ்ந்த அருவித் தடவரைவாய்,-ஆழ்ந்த
மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,
அணிநீல வண்ணத் தவன்.
50
2332
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,
அவனே யணிமருதம் சாய்த்தான்,-அவனே
கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்,
இலங்கா புரமெரித்தான் எய்து.
51
2333
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய்,-எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்,
முன்னிலம்கைக் கொண்டான் முயன்று.
52
2334
முயன்று தொழுநெஞ்சே* மூரிநீர் வேலை,
இயன்றமரத் தாலிலையின் மேலால்,-பயின்றங்கோர்
மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,
தண்ணலங்கல் மாலையான் தாள்.
53
2335
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி,
கீளா மருதிடைபோய்க் கேழலாய்,-மீளாது
மண்ணலகம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,
பெண்ணகலம் காதல் பெரிது.
54
2336
பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,
கரிய முகிலிடைமின் போல,-தெரியுங்கால்
பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்
நீணெடுங்கண் காட்டும் நிறம்.
55
2337
நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,
இறையுருவம் யாமறியோ மெண்ணில்,-நிறைவுடைய
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,
பூமங்கை கேள்வன் பொலிவு?
56
2338
பொலிந்திருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன்,-பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி.
57
2339
தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,
அளிந்த கடுவனையே நோக்கி,-விளங்கிய
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு.
58
2340
வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,
தாழும் அருவிபோல் தார்கிடப்ப,-சூழும்
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்
பெருமான் அடிசேரப் பெற்று.
59
2341
பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,
முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து,-கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்
பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு.
60
2342
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல்,-வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண் ணகர்.#
61
2343
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்
மண்ணகரம் மாமாட வேளுக்கை,-மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.
62
2344
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,-சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவு மொன்றாய் இசைந்து.
63
2345
இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,
பசைந்தங் கமுது படுப்ப,-அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு?
64
2346
அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,
மங்க இரணியன தாகத்தை,-பொங்கி
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து.
65
2347
காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மாமணிகள்,
ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப,-வாய்ந்த
மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,
அதுகே டவர்க்கிறுதி ஆங்கு.
66
2348
ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,
ஓங்கு கமலத்தி னொண்போது,-ஆங்கைத்
திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்
பகரு மதியென்றும் பார்த்து.
67
2349
பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு,
பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து,-கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.
68
2350
வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க்
கற்பென்று சூடும் கருங்குழல்மேல்,-மற்பொன்ற
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,
பூண்டநா ளெல்லாம் புகும்.
69
2351
புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழந்து, அருவி
உகுமதத்தால் கால்கழுவிக் கையால்,-மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,
கண்டு வணங்கும் களிறு.
70
2352
களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,
ஒளிறு மருப்பொசிகை யாளி-பிளிறி
விழ.கொன் நின்றதிரும் வேங்கடமே, மேனாள்
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று.
71
2353
குன்றொன்றி னாய குறமகளிர் கோள்வளைக்கை,
சென்று விளையாடும் தீங்கழைபோய்,-வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை
இளங்குமரர் கோமான் இடம்.
72
2354
இடம்வலம்ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,
வடமுக வேங்கடத்து மன்னும்,-குடம்நயந்த
கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,
நாத்தன்னா லுள்ள நலம்.
73
2355
நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,
நிலமே புரண்டுபோய் வீழ,-சலமேதான்
வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து.
74
2356
சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை,-சேர்ந்து
சினவேங்கை பார்க்கும் திருமலையே,ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு.
75
2357
பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா,-விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.
76
2358
ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்,
வாய்ந்த குழவியாய் வாளரக்கன்,-ஏய்ந்த
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த
அடிப்போது நங்கட் கரண்.
77
2359
அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன்,-சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,
ஓதுகதி மாயனையே ஓர்த்து.
78
2360
ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம்,-கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
நிரையார மார்வனையே நின்று.
79
2361
நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,
ஒன்றியவீ ரைஞ்ஏ றுடன்துணிய,-வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.
80
2362
நெஞ்சால் நினைப்பரிய னேலும், நிலைபெற்றேன்
நெஞ்சமே* பேசாய் நினைக்குங்கால்,-நெஞ்சத்துப்
பேரா நிற்கும் பெருமானை என்கொலோ,
ஓராது நிற்ப துணர்வு?
81
2363
உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரிய னுண்மை,-இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
எங்கணைந்து காண்டும் இனி?
82
2364
இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,
இனியவன் காண்பரிய னேலும்,-இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,
உள்ளத்தி னுள்ளே யுளன்.
83
2365
உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்
துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும்,-உளனாய
வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,
கண்டா ருகப்பர் கவி?
84
2366
கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,
செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார்,-புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே, பின்னைக்காய்
ஏற்றுயிரை அட்டான் எழில்?
85
2367
எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்
தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும்,-எழில்கொண்ட
நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,
கார்வானம் காட்டும் கலந்து.
86
2368
கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும்,-நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
அந்திவான் காட்டும் அது.
87
2369
அதுநன் றிதுதீதென் றையப் படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன்,-பொதுநின்ற
பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து.
88
2370
முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள் வித்த,-தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள்
தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு.
89
2371
சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா
றலம்பிய சேவடிபோய், அண்டம்-புலம்பியதோள்
எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,
வண்டுழாய் மாலளந்த மண்?
90
2372
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி-கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,
வயிற்றினோ டாற்றா மகன்.
91
2373
மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,
மகனா மவன்மகன்றன் காதல்-மகனை,
சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே
நிறைசெய்தென் நெஞ்சே* நினை.
92
2374
நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல்,-கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,
உள்ளத்தே வைநெஞ்சே* உய்த்து.
93
2375
உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன்,-மெத்தெனவே
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,
பொன்றாமை மாயன் புகுந்து.
94
2376
புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து, அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம்,-சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் னெஞ்சமே* வாழ்த்து.
95
2377
வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே,-கேழ்த்த
அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,
அடித்தா மரையாம் அலர்.
96
2378
அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,
மலரெடுத்த மாமேனி மாயன்,-அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்
கெண்ணத்தா னாமோ இமை?
97
2379
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும்,-நமன்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
98
2380
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,-குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்,
தாள்முதுலே நங்கட்குச் சார்வு.#
99
2381
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும்,-காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,
தேனமரும் பூமேல் திரு.#
100
பேயாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com